Friday, 23 March 2012

பாசிப்பருப்பு நெய் உருண்டை

பாசிப் பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதில் எளிதான ஏராளமான பலகாரங்களை செய்யலாம். பாயசம், நெய் உருண்டை போன்றவைகள் பாரம்பரியம் மிக்கவை. பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்து மிக்கது. இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வர அபார வளர்ச்சி தெரியும்.

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு – 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் 200 கிராம்
ஏலக்காய் – 6
முந்திரி உடைத்தது 50 கிராம்

நெய் உருண்டை செய்முறை

பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.

அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.

வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

சுவையான சத்தான இனிப்பு இது. செட்டிநாட்டுப் பக்கம் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதனை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்

பாசிப்பருப்பு பாயாசம்

உகாதி பண்டிகை விருந்தில் பாசிப்பருப்பு பாயாசம் முக்கியமாக இடம்பெரும். பாசிப்பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதனுடன் வெல்லம், நெய், முந்திரி, திராட்சை சேர்த்து செய்யப்படும் பாயாசம் சுவையானதாக இருப்பதோடு கூடுதல் சத்துக்களையும் கொடுக்கும். இது குழந்தைகளுக்கும் விருப்பமானது.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 200 கிராம்
அச்சு வெல்லம் - 150 கிராம்
பால் – 200 மிலி
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் – 1 கப்
நெய் – 4 ஸ்பூன்

பாயாசம் செய்முறை

வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்து எடுத்து குக்கரில் குழைய வேக விடவும். வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.

ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும். சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.

தித்திக்கும் கேரட் அல்வா!

காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். எண்ணற்ற சத்து நிறைந்த கேரட்டில் இருந்து சுவையான அல்வா தயாரிக்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி உண்ணுவதோடு உடல் நலத்திற்கும் ஏற்றது. குறைந்த கொழுப்பு சத்து கொண்டது.

கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்

கேரட் – கால் கிலோ
சர்க்கரை – 300 கிராம்
பால் – கால் லிட்டர்
நெய் – 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
கேசரி பவுடர் – கலருக்கு ஏற்ப

அல்வா செய்முறை

முதலில் கேரட்டின் தோலினை நன்றாக சீவி வைத்துக்கொள்ளவேண்டும். அது மண், கண்ணுக்கு தெரியாத பூச்சி ஆகியவற்றை நீக்க உதவும். பின்னர் நன்றாக துருவி வைத்துக்கொண்டு பாலில் வேகவிடவேண்டும். நன்றாக குழைய வெந்து கெட்டியான உடன் அதில் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். அது அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவேண்டும்.

பின்னர் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். கலருக்கு ஏற்ப கேசரி பவுடர் ஃப்ளேவர்களை வாங்கி தேவையான அளவு உபயோகிக்கலாம். இறக்குவதற்கு முன் நெய் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது சுவையான சத்தான கேரட் அல்வா தயார். இதற்கு அரை மணி நேரம் போதுமானது. திடீரென விருந்தினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் இந்த கேரட் அல்வாவை உடனடியாக செய்து அசத்தலாம்.

செட்டிநாடு வெல்ல அதிரசம்

அதிரசம் என்பது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் செய்யப்படும் சுவையான, சத்தான இனிப்பு பலகாரம். திருவிழா காலங்களில் விருந்தினர்களை உபசரிக்க இந்த இனிப்பு செய்வது வழக்கம். ஒருவாரம் வரை கெட்டுப்போகாது வைத்திருந்து சாப்பிடலாம். அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்வதால் சத்தான பலகாரம் செய்து கொடுத்த திருப்தியும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

அரிசி – அரை கிலோ

வெல்லம் – 300 கிராம்

ஏலக்காய் சிறிதளவு

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அதிரசம் செய்முறை


பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ளபோதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.

பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெய்யை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார். மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

மொறு மொறு காலிஃப்ளவர் 65

காலி ஃப்ளவர் ஊட்டச்சத்துள்ள ஒரு உணவுப் பொருள். இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் உள்ளது. சத்தான உணவு என்பதால் குழந்தைகளுக்கு உணவில் அடிக்கடி செய்து தரலாம். அதுவும் மொறு மொறுப்பான கோபி 65 செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உட்கொள்வர்.

தேவையான பொருட்கள்

பெரிய காலிஃப்ளவர் - 1

கார்ன் ஃப்ளார் மாவு - 4 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

சமையல் சோடா - 1 சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்

கோபி 65 - செய்முறை

காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும். இதனால் அதில் கண்ணிற்கு தெரியாத பூச்சிகள் இருந்தாலும் இறந்துவிடும். பின்னர் அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது கான்ஃப்ளார் மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் வாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் ஊறவைத்த காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும். மொறு மொறுப்பான கோபி 65 தயார். கொத்துமல்லி தூவி பரிமாறவும்.